ராவணன் நேற்றைக்குத்தான் முழுமையாக பார்த்தேன்....நிச்சயமாக இது விமர்சன பதிவில்லை. விமர்சிக்க தகுதி வேண்டும். நூறு ரூபாய் கொடுத்துவிட்டால் மட்டுமே அந்த தகுதி வந்து விடுவதாக எல்லாரும் நினைத்துக் கொள்கிறோம். இதைத் தாண்டிய விஷய ஞானமும், விருப்பு வெறுப்புக்கு அப்பாற் பட்ட அணுகு முறையும் விமர்சகனுக்கு அவசியமாகிறது.
போஸ்ட்டர் ஒட்டுகிறவனும் சினிமாக்காரன்தான், என் மாதிரி திரையரங்கத்தானும் சினிமாக்காரன்தான். ஆனால் என்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொள்வதில் எப்போதும் உடன்பாடில்லை. நான் வியாபாரி மட்டுமே!.....ஓடுகிற குதிரையில் மட்டுமே காசு போட நினைக்கிற வியாபாரி. நாற்பதாண்டுகளாய் இதையே செய்து கொண்டிருக்கும் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை ஆள்....சுயபுராணம்!
ஒரு வர்த்தகனின் பார்வையில் ராவணன் தமிழுக்கான படமில்லை .நேரடி ஹிந்திப் படமாக செய்திருந்தால் இன்னமும் அடர்த்தியாக செய்திருக்க வாய்ப்பிருக்கிற படம் இது. கலாச்சார சமரசங்கள் அன்னியத் தன்மையை நிறையவே அள்ளித் தெளித்து விட்டது.தமிழில் படம் செய்து தன் தமிழ் அடையாளத்தை நிறுவிக் கொள்ள வேண்டிய நிர்பந்தந்திற்கு மணிரத்னம் மற்றும் அவர் குழுவினரின் பெருமளவு உழைப்பு விழலுக்கு இறைத்த நீராய் போனது சோகம்தான்.
ராவணன் படத்தைக் காட்டிலும் இருவர் மிக நேர்த்தியான தயாரிப்பு என்பது என்னுடைய தனிக் கருத்து. மொழியும் கலாச்சாரமும் இருந்தும் கதை நாயகர்களாய் நடிக்க தமிழக கலைஞர்கள் தயங்கினார்கள் அல்லது தவிர்த்தார்கள் என்பது பதிவு செய்யப் படாத வரலாறு.மோகன்லால் பாத்திரத்திற்கு நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட நாயகர்களை அணுகியதும் அவர்கள் தயங்கியதால் கடைசியில் ஒரு மளையாளி தமிழர்களின் நாயகனாய் வலம் வந்தார்.
மோகன்லாலின் அன்னியத் தன்மை திரையரங்குகளை விட்டு படம் ஓட காரணமாய் போனது. ஆனால் காலத்தே நிற்கும் கலை படைப்பு இருவர். இசையும், ஒளிப்பதிவும் இந்த படத்தின் சிறப்புகளில் ஒன்று, Mood lighting என்கிற வித்தைக்கு இந்த் படத்தினை உதாரணம் காட்டலாம். குறைகள் இல்லாமலில்லை, அதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதுமில்லை.