Wednesday

சிங்கம்ம்ம்ம்ம்ம்.....

இந்த ஆள் என்னுடைய ஆதர்சம்...இவரைப் போல எழுதிட வேண்டுமென பல காலமாக நினைத்து கொண்டிருக்கிறேன், எழுதினேனா என்பது வேறு விஷய்ம். எழுபது வருடங்களுக்கு மேலாக பத்திரிக்கை துறையில் தீவிரமாய் இயங்கிவருபவர். இப்போது வயதின் காரணமாய் உடல் தளர்ந்திருந்தாலும் இளமை நிரம்பி வழியும் எழுத்தாளர்.

அவரின் எழுத்துக்களில் திமிறும் இளமையும்,ததும்பும் நகைச்சுவையும் வாசித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும்....வார்த்தைகளால் இங்கே சொல்லிவிட முடியாது.அரசியல் கட்டுரகளில் இவரால் பந்தாடப் படாத அரசியல்வாதிகள் சொற்பமே...கொஞ்சமும் தன்னை சமரசம் செய்து கொள்ளாத எழுத்தாளன் இவர்.

தொண்ணூற்று ஆறு வயதில் தனது கடைசி நாவல் என்று சொல்லி தற்போது ஒரு புதினத்தை வெளியிட இருக்கிறார்(The Sunset club).சமீபத்தில் அவரின் பேட்டி ஒன்றினை பார்க்க நேர்ந்தது.தேடிப் பிடித்து அதன் இனைப்பை இங்கே தந்திருக்கிறேன்.பார்த்து விட்டு சொல்லுங்கள்...இந்த எழுத்து சிங்கத்தின் வீச்சினை...

இத்தனை சொல்லும் போதே தெரிந்திருக்க வேண்டும்...அவர் யாரென, தெரியாதவர்களுக்கு அவர் திரு.குஷ்வந்த் சிங்.

Thursday

உள்ளேன்...உள்ளேன்...உள்ளேன்!

பதிவு எழுதலைன்னா என்ன?....அதான் இப்ப டெம்ப்ளேட் மாத்தியாச்சில்ல...!


:)

Saturday

ஆயுத பூசை!






கும்புட்டுக்கங்க! இனியாவது எனக்கு நல்ல புத்தி வரணும்னு!

Sunday

சத்திய(மா) சோதனை பதிவு

கதறக் கதற, பிழியப் பிழிய,துள்ளத் துடிக்க நீள நீளமாய் பதிவுகள் எழுத வேண்டுமென ஆசையெல்லாம் படுகிறேன், மேட்டரெல்லாம் கூட நெறய இருக்கு....ஆனால் நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருவாளர் சோம்பேறித்தனத்துடன் அருமையான கூட்டணி அமைத்திருப்பதால் அந்த மாதிரியான பதிவுகளை வாசிக்கும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்காமல் போகிறது.

என்ன சொல்ல, நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்....

அயோத்தி தீர்ப்புல எனக்கு உடன்பாடில்லை,அந்த நாள் குத்து வெட்டு இல்லாமல் அமைதியா போனதில் ரொம்பவே சந்தோஷம்.சகிப்புத் தன்மையில் நாம் வளர்கிறோமா என்ன!.

எந்திரன் ரிலீஸ் செய்த ஒரே பதிவர் என்கிற பெருமையை நான் தட்டிச் சென்று விட்டதாக நாளைய சரித்திரம் கூறும்.எனக்கு அதிலெல்லாம் பெரிதாய் ஆர்வமில்லை, போட்ட காசு வந்தால் போதுமென்ற மனநிலையே மேலோங்கியிருக்கிறது. நிச்சயமாக எந்திரன் விமர்சனம் எழுத மாட்டேன் என்ற உறுதியை இங்கே தந்து விடுகிறேன். பிழைத்துப் போங்கள்...

”The Immortals of Meluha” பற்றி எழுதுவதாக ஏற்கனவே கூறியிருந்தேன். இன்னமும் முடிக்கவில்லை, ஆனால் வாசித்தவரையில் சுவாரசியமாய் இருக்கிறது. மிகப் பெரிய பிம்பமான சிவனை, ஒரு சாமானிய இளைஞனாய் கற்பனை செய்வதும், அவரின் எண்ண் ஓட்டத்தில் கூடவே பயணிப்பதும் சுவாரசியமாய் இருக்கிறது.விரிவாய் எழுதிட வேண்டிய விமர்சனம் அது, இதை ஒரு ட்ரெயிலராக வைத்துக் கொள்ளலாம்...சினிமாக்காரன் புத்தி!

மகாத்மாக்கள் ஒரு நூற்றாண்டுக்கு ஒருத்தர்தான் பிறப்பாஙக்ளாம். அந்த கணக்குல பார்த்தா 1969ல பிற்ந்த மஹாத்மாவை மக்கள் எப்ப தெரிஞ்சுக்குவாங்கன்னு தெரியலையே!...ம்ம்ம்ம், விதி வலியது!


Thursday

சந்திரபோஸ் போய்ட்டாராமாம் !

இளையராஜா என்கிற பெரு வெளிச்சத்தின் முன்னால் துக்குணூண்டு மின்மினிகளாய் வெளிச்சம் காட்டிய இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபோஸ் காலம் ஆகிவிட்டார். AVM நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளரோ என்று நினைக்கிற வகையில் இவருக்கும்,AVM நிறுவனத்துக்குமான தொடர்பு இருந்தது. தொலைக்காட்சி தொடர் எடுக்க வந்த போது கூட இவரைத்தான் அவர்கள் பயன் படுத்தினர்.

மூன்று ரஜினி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான செய்திதான்...இசையமைப்பாளர் சந்திரபோசை நான் ரசித்ததாக இப்போது கூறினால் அது அப்பட்டமான பொய்யாகவே இருக்கும். ஆனால் அவர் பாடிய ஒரே ஒரு பாட்டுக்கு நான் அநியாய ரசிகன்....ம்ம்ம்ம், ஏண்டி முத்தம்மாவைத்தான் சொல்கிறேன்.

தூங்கி வழியும் நீர்நிலை, படகு,தனிமை, நீங்கள் இவையெல்லாம் சேரும்போது, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்...அந்த சூழல் தரும் உணர்வுதான் சொர்கம். சந்திரபோஸ் இழைந்திருப்பார் இந்த பாடலில், ப்கிர்ந்து கொள்ளலாமென இனையத்தில் தேடினால், அவரே ரிமிக்ஸ் செய்ததாக ஒரு ஒளித் துணுக்கு கிடைத்தது....முள்ளைத் தாண்டி ரோஜாவை ரசிப்பதைப் போல, இந்த பாடலை கேட்டுப் பாருங்கள்.


ராமர் மசூதி!

தீர்ப்பு ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது....

நான் இந்துவாய் பிறந்திருப்பதால், அந்த இடத்தை மசூதிக்கு கொடுக்கவே விரும்புகிறேன். ஒரு வேளை முஸ்லீமாய் பிறந்திருந்தால் கோவிலுக்கு விட்டுக் கொடுத்திருப்பேனோ என்னவோ!

எனது நம்பிக்கைகள் மட்டுமே என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கின்றன!

கடவுள்கள் பாவம்தான்!

Saturday

பிள்ளையாரும், பிள்ளை யானும்....!

நினைவு தெரிந்த காலங்களில், சுமாராக பரிட்சை எழுதி இருந்தால் கூடுதல் மார்க் போடுபவராகவும், எதுவுமே எழுதாவிட்டால் பாஸாக்கிவிடுகிற ஆபத்பாந்தவனாகவே அறிமுகமாகி இருந்தார். ஆனால் வளர வளர என்னளவில் அந்த நம்பிக்கையை சுக்குநூறாக்கிய பெருமை அவருக்கு உண்டு.

வயசுக்கு வந்த பின்னர், கோரிக்கைகள் மாறியிருந்தன. சில, பலரின் கடைக்கண் பார்வைகளுக்கு அவரிடம் மனுப் போட்டேன். காக்காய் உட்கார்ந்ததா அல்லது பனம் பழம் தானாய் விழுந்ததா என்பது தெரியாது.சில, பல நிகழ்வுகளும், சந்தோஷங்களும், அதன் தொடர்ச்சியான சோகங்களையும் நடந்தேறியது.இப்படியான அனுபவங்களினால் வெறுத்துப் போய் ஒரு கட்டத்தில் என்னை நாத்திகனாய் மாற்றியதில் ஆனைமுகத்தானுக்கு குறிப்பிடத் தக்க பங்கு இருந்தது.

எங்கள் கல்லூரியின் பின்னால் ”மயில்காடு” என்று ஒரு காடு இருந்தது. இப்போது அந்த காடு இல்லை,அழித்து விட்டார்கள். அந்த காட்டின் நடுவில் ஒரு பெரிய மேடையின் நடுவே ஒற்றை ஆளாய் ஒரு பிள்ளையார் இருந்தார். அவருக்கு பூசைகள் எல்லாம் கிடையாது, ஏனெனில் அந்த வனாந்திர பகுதியில் ஆட்கள் நடமாடாத காலம் அது...அந்த காடு தந்த தனிமையும், அமைதியும் எங்கள் குழுவிற்கு பிடித்திருந்ததால் கல்லூரி நாட்களில் ஆறாவது நண்பராகவே இருந்தார் பிள்ளையார்.கல்லூரி நாட்களுக்குப் பின்னால் தொழிலில் காலடி எடுத்து வைத்ததும் ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்றுதான், அந்தக் கணக்கில் பார்த்தால் இன்றோடு பதினெட்டு வருட சர்வீஸ் ஆகிவிட்டது.

பிள்ளையார் குறித்து எனக்கு பல விமர்சனங்கள் உண்டு...ஆனாலும் பரஸ்பர சகிப்புத் தன்மையினால் இன்று வரை பிரியாமல் கூடவே இருக்கிறோம். கடவுள் என்பதற்கும் மேலே கூட்டாளி மாதிரியான ஒரு உறவு எங்களுக்குள்...இன்றைக்கு அவருக்கு பிறந்த நாள்!

ஹேப்பி பர்த்டே பாஸ்!